தமிழ்நாடு
நம்பிக்கையில்லாத் தீர்மானம் எப்போது: பொறுத்திருந்து பாருங்கள் என ஸ்டாலின் பதில்!
தமிழக சட்டசபையின் சபாநாயகராக அதிமுகவின் தனபால் உள்ளார். இவர் மீது நம்பிக்கை இழந்ததால் திமுக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்துள்ளார்.
ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலோடு தமிழக சட்டசபை இடைத்தேர்தலையும் சந்தித்தது தமிழகம். இதில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 23-ஆம் தேதி வெளியானது. அதில் திமுக 13 இடங்களையும், அதிமுக 9 இடங்களையும் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.
இருந்தாலும் தமிழக அரசியலில் நம்பர் விளையாட்டு மறைமுகமாக நடந்துகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேர் இன்று சபாநாயகர் தனபால் அறையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலினிடம் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் எப்போது கொண்டு வரப்படும் என கேள்வி எழுப்பினர். அதற்கு சட்டமன்றம் கூடும்போது, ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.