தமிழ்நாடு
“பாம்பு, பல்லி விவகாரம்”- கோபித்துக் கொண்ட எடப்பாடியார்; விடாமல் விளாசும் ஸ்டாலின்!
சசிகலாவின் காலில் ஊர்ந்து போய் முதல்வர் பதவியை வாங்கியவர் எடப்பாடி பழனிசாமி என்று சில நாட்களுக்கு முன்னர் விமர்சித்திருந்தார் மு.க.ஸ்டாலின். அதற்கு சினம் கொண்ட பழனிசாமி, ‘ஊர்ந்து போக நான் என்ன பல்லியா, பாம்பா… மனுஷங்க’ என்று ஆதங்கப்பட்டார்.
இந்நிலையில் காஞ்சியில் திமுக பிரச்சாரக் கூட்டதிதல் இவ்விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்துப் பேசியுள்ளார் ஸ்டாலின்.
‘பழனிசாமி என்றால் இப்போது நமக்கு நினைவுக்கு வருவது, ஊர்ந்து போனவர். அதைச் சொன்னால் பாம்பா? பல்லியா? என்று கேட்பார். பாம்பு, பல்லியை விட துரோகத்திற்குதான் விஷம் அதிகம்.
பழனிசாமி என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது கமிஷன் – கலெக்ஷன் – கரப்ஷன்தான்.
பழனிசாமி என்று சொன்னால், கொடநாடு கொலை – கொள்ளை, பழனிச்சாமி என்று சொன்னால் சாத்தான்குளத்தில் நடந்த படுகொலை, பழனிசாமி என்று சொன்னால் நீட்தேர்வு, 14 மாணவ மாணவ, மாணவியர் தற்கொலை. பழனிசாமி என்று சொன்னால், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை, 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுதான் நினைவுக்கு வரும். பா.ஜ.க.வின் கிளைக் கழகம்தான் அ.தி.மு.க. என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
எனவே தமிழக வரலாற்றிலேயே ஒரு கரும்புள்ளியை இன்றைக்கு பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உருவாக்கியிருக்கிறது. எனவே இந்தக் கொள்ளைக் கூட்டத்தை கோட்டையிலிருந்து விரட்டுவதற்கு, வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் நீங்கள் அத்தனை பேரும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்’ என்று கூறினார்.