தமிழ்நாடு
சென்னையில் புதிதாக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 800 படுக்கைகள்- கள ஆய்வு மேற்கொண்ட முதல்வர்!
கொரோனா வைரஸ் தொற்றால் இன்று மட்டும் தமிழகத்தில் 26,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக 800 படுக்கைகள் – ஆக்சிஜன் வசதிகளுடன் தயாராகி வரும் பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து ஆய்வு செய்தார்.
#COVID19 நோயாளிகளுக்காக 800 படுக்கைகள் – ஆக்சிஜன் வசதிகளுடன் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தயாராகி வரும் கோவிட் பராமரிப்பு மையத்தை பார்வையிட்டேன்.
முதற்கட்டமாக 300 படுக்கைகள் 10-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும். pic.twitter.com/f7sAgqTfEu
— M.K.Stalin (@mkstalin) May 7, 2021
இது குறித்து அரசு தரப்பில்,
சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டு வரும் கோவிட் பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இம்மையத்தில் முதற்கட்டமாக 300 படுக்கைகளும் அடுத்தகட்டமாக 500 படுக்கைகளும் என மொத்தம் 800 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்காக 11 கிலோ லிட்டர் கொள்ளவுக் கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டு வரும் 300 படுக்கைகள் 10 ஆம் தேதி முதல் செயல்படும். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்தும், அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து இம்மையத்திற்கான மருத்துவர்களும் செவிலியர்களும் பணியமர்த்தப்படுவார்கள்.