தமிழ்நாடு
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
2023-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கட்கிழமை காலை தொடங்கி வைத்தார்.
சென்ற ஆண்டு 1000 ரூபாய்க்குப் பதிலாகத் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக 21 மளிகை பொருட்களை வழங்கியது. ஆனால் அதில் பல்வேறு பொருட்கள் தரமாக இல்லை என விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக இலவச வேட்டி, சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1000 உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ரேஷன் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை அகதிகள் என மொத்தமாக 2.19 கோடி குடும்பங்களுக்குப் பரிசுத் தொகுப்பு தரப்பட உள்ளது.
ஜனவரி 3-ம் தேதி முதல் பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் பொங்கல் பரிசை பெற முடியாதவர்களுக்கு அடுத்தவராம் ஜனவரி 16-ம் தேதியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு பொருட்கள் மஞ்சப் பையில் வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு பலர் தங்களுக்கு இந்த மஞ்சப் பையும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் பண்டிகை பொங்கல் என கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இது இந்துக்கள் பண்டிகை, இந்துக்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என பாஜக தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.