தமிழ்நாடு
8 மாதங்களில் நான் இதை எல்லாம் செய்துள்ளேன்: மு.க.ஸ்டாலின்
ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 8 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் நடக்காமலிருந்து வந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து இப்போது நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த பரப்புரையில் ஈடுபட்டு வரும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்றால் மட்டுமே அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்கள் வரை சென்று சேரும்.
சேலம் மாவட்டத்தில் திமுக சார்பாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், திமுக மீதான கடுமையான விமர்சனங்கள் குறைந்துள்ளன. திமுக மீது குறைகூற எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த தகுதியும் இல்லை.
கொடநாடு வழக்கில் நடந்தது என்ன என்ற உன்மை வெளிவர வேண்டும் என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கொடநாடு வழக்கு குறித்துப் பேசினால் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறார்கள் என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தூத்துக்குடியில் திங்கட்கிழமை அதிமுக சார்பில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சார்பாகப் பரப்புரையில் ஈடுபட்டு வந்த எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றத் தேர்தலின் போது திமுக 525 வாக்குறுதிகளை அறிவித்தது. அதில் 200 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது. திமுக சொல்வது மிகப்பெரிய பொய்.” என கூறினார்.