தமிழ்நாடு
சிறையில் உயிரிழந்த கைதியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பாளையங்கோட்டை மத்திய சிறையில் உயிரிழந்த விசாரணை கைதி முத்துமனோவின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை சிபி-சிஐடிக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பூலம் பகுதி 2 கிராமம், வாகைகுளத்தில் வசித்து வந்த முத்துமனோ என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்துள்ளார்.
அவரது குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேற்படி சம்வபத்திற்கு காரணமாக பாளையங்கோட்டை சிறைச் சாலைப் பணியாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வழக்கானது குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டு உள்ளது.