தமிழ்நாடு
கொடநாடு கொலை; நீதிமன்றத்தை நாடும் திமுக: எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் ஸ்டாலின்!
கொடநாடு கொள்ளை மற்றும் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் வலுவாக அடிபடுகிறது. தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வெளியிட்ட தகவலால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இந்த கொலை சம்பவம் குறித்து பேசி வருகிறது.
இந்த கொலை வழக்கில் தமிழக முதல்வர் மீது நேரடியாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார் தெகல்கா முன்னாள் ஆசிரியர். இந்நிலையில் இதனை மத்திய அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தும் திமுக தலைவர் ஸ்டாலின் இல்லையென்றால் திமுக நீதிமன்றத்தை நாடும் என தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், முதல்வர் மீதே தீவிரமான புகார்கள் சொல்லப்பட்டிருக்கும் நிலையில் இதில் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் தலையிட வேண்டும். கொடநாடு விவகாரம் அரசியல் சதி என்று சொல்கிறார் எடப்பாடி. ஆனால் இதை விசாரித்து தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்கத் தயாரா?
உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் சிறப்பு விசாரணைக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் முதல்வரிடம் இதுகுறித்துப் பேச வேண்டும். இல்லையென்றால் திமுக நீதிமன்றத்தை நாடும் என இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.