தமிழ்நாடு
‘கேஸ் போடுயா பார்ப்போம்!’- எடப்பாடியார் முதல் அமைச்சர்கள் வரை… அனைவருக்கும் ஸ்டாலின் சவால்
![EPS - MK Stalin - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/EPS-MK-Stalin.jpg)
அதிமுகவினரோ, அல்லது முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, நான் பேசுவதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து பார்க்கலாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பேசியுள்ளார்.
முன்னதாக ஸ்டாலின், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு எதிராக ஒரு பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். அவர், ‘கொரோனா காலத்தில் திரைப்படங்களைத் திரையிடுவதற்கு, சினிமா தியேட்டர் ஓனர்களுடன் பேரம் பேசியுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ’ என்று குற்றஞ்சாட்டினார்.
அதற்கு கொதிப்படைந்த அமைச்சர் ராஜூ, ‘கொரோனா காலத்தில் இங்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்துத் திரையரங்குகளும் மூடியிருந்தன. அந்த நேரத்தில், படமே ஓடாத சமயத்தில் எப்படி பேரம் பேசியிருக்க முடியும். ஸ்டாலின் பேசியதற்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அனுமதி கேட்டிருந்தேன். அவரும் வழக்குத் தொடர்ந்து கொள்ள அனுமதி கொடுத்து விட்டார். கூடிய விரைவில் வழக்குத் தொடர்வது உறுதி’ எனத் திட்ட வட்டமாக கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள ஸ்டாலின், ‘இதுவரை அதிமுகவினர் பலர், என் மீது வழக்குத் தொடரப்படும் என்று சொல்லி மட்டும் தான் வருகிறார்கள். செயலில் எதையும் காட்டியதில்லை.
கடம்பூர் ராஜூவும் சொல்கிறார். முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். பல்வேறு அமைச்சர்கள் வழக்குத் தொடர்வேன் என்று சவால் விட்டுள்ளார்கள். நான் சவால் விடுகிறேன். தைரியம் இருந்தால் வழக்குத் தொடருங்கள் என்று’ எனக் கூறியுள்ளார்.