தமிழ்நாடு
மாஸ்க் போடாமல் வந்த திமுக தொண்டர்கள்; அண்ணனாக கெஞ்சிய மு.க.ஸ்டாலின்- பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!
![MK Stalin 5 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/MK-Stalin-5.jpg)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, முகக்கவசம் அணியாமல் வந்த தொண்டர்களுக்கு ‘அன்பு அண்ணனாக’ கோரிக்கை வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது.
பிரச்சாரத்தின் போது முகக்கவசம் அணியாமல் வந்த தொண்டர்களைப் பார்த்து:-
உங்களில் பலர் மாஸ்க் போடாமல் இந்தக் கூட்டத்திற்கு வந்துள்ளதை நான் பார்க்கிறேன். நான் கூட இப்போது மாஸ்க் போடவில்லைதான். அதற்குக் காரணம், உங்களைவிட உயரத்தில் தனியாக இருக்கிறேன். மேலும், உரையாற்றுவதற்கு ஏதுவாக மாஸ்க்கை கழட்டி தூர வைத்துள்ளேன். ஆனால், கூட்டங்களுக்குச் செல்லும் போதும், மக்களுடன் இருக்கும் போதும் நான் நிச்சயம் மாஸ்க் போட்டுக் கொள்வேன். எனவே உங்களின் அண்ணனாக, தம்பியாக உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து கூட்டங்களில் மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள். தற்போது கொரனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அதேபோல, முடிந்தவரை வாய்ப்பிருப்பவர்கள் கொரோனா தடுப்பூசியையும் போட்டுக் கொள்ளுங்கள். நானும் சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அப்படிப் போட்டால் இரண்டு நாட்களுக்கு மயக்கம் இருக்கும், காய்ச்சல் வரலாம். ஆனால், அந்த இடர்பாடுகளை நினைத்து தடுப்பூசியைப் போடாமல் தவிர்க்க வேண்டாம். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்’ என்று அறிவுரை வழங்கினார்.
ஸ்டாலின் உரிமையோடு அட்வைஸ் செய்ததை பலரும் கைத்தட்டி வரவேற்றனர். இச்சம்பவம் திமுக தொண்டர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.