தமிழ்நாடு
45 நிமிடங்கள் ஒரே வீட்டில் இருந்தும் ஒருவரை ஒருவர் சந்திக்காத முக ஸ்டாலின் – முக அழகிரி!
ஒரே வீட்டில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரர் முக அழகிரி ஆகியோர் 45 நிமிடங்கள் இருந்தும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ளாத தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் முக அழகிரி ஆகியோர்களின் சகோதரர் முக தமிழரசு அவர்களின் மாமியார் நேற்று காலமானார். கடந்த சில நாட்களாக நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார் நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று கோவை சென்றார்.
இந்த நிலையில் அதே நிகழ்ச்சிக்கு முக ஸ்டாலின் சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி அவர்களும் வந்திருந்தார் என்பதும் ஜெயலட்சுமி உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக ஸ்டாலின் மற்றும் முக அழகிரி ஆகிய இருவரும் ஒரே வீட்டில் சுமார் 45 நிமிடங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த 45 நிமிடங்களில் ஒருவருக்கு ஒருவர் நேரில் சந்தித்து இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுகவிலிருந்து முக அழகிரி நீக்கப்பட்டதிலிருந்தே முக அழகிரி மற்றும் முக ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது என்பதும் இதனை அடுத்து பல ஆண்டுகளாக இருவரும் நேருக்கு நேர் சந்திக்காமல், பேசாமல் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.