தமிழ்நாடு
‘சேர்த்தால் உதயம்… தவிர்த்தால் அஸ்தமனம்’- மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் அலப்பறை!
மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் திமுக-வை விமர்சனம் செய்யும் வகையில் போஸ்டர்களை ஒட்ட அந்த போஸ்டர் வசனங்கள் வழக்கம் போல் வைரலாகி வருகிறது.
ஜனவரி 30-ம் தேதி அழகிரி பிறந்தநாள் வருவதால் அதையொட்டி மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் குஷியில் போஸ்டர் அடித்து வருகின்றனர். மேலும் ‘ஆட்சி அமைக்க ஐ-பேக் தேவையில்லை, கலைஞர் மூளை உங்கள் அஞ்சாநெஞ்சன் அழகிரி போதும்’ என்ற வசனங்கள் கொண்ட போஸ்டர்களும் மதுரை முழுக்க ஒட்டப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது ஏற்பட்ட சலசலப்பால் திமுக கட்சியில் மட்டும் இருந்து அல்ல அரசியலில் இருந்தே விலகி தான் இருந்து வந்தார் அழகிரி. அதன் பின்னர் கலைஞரின் மறைவு. அதன் பின்னராவது அழகிரியை திமுக-வில் இணைத்துக் கொள்வார்கள் என அழகிரி ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், திமுக-வில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டார் அழகிரி.
இதன் பின்னர் ரஜினிகாந்த்-க்கு ஆதரவு தெரிவித்து அவ்வப்போது பேட்டிகள் கொடுத்து வந்தார். அழகிரி நிச்சயமாக ரஜினி அல்லது பாஜக உடன் இணைவார் என பேசப்பட்டது. சமீபத்தில் மதுரையில் அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தி உள்ளதாகத் தெரிகிறது. அந்த சந்திப்பில் விரைவில் அரசியல் நிலைப்பாடு எடுக்கப்படும் என்றும் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அழகிரி அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் மேற்குறிப்பிட்ட வசனங்கள் நிறைந்த போஸ்டர்கள் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாகவே கூறப்படுகிறது.