தமிழ்நாடு
‘ஜனவரி 3 ஆம் தேதி புதிய கட்சி…’- மு.க.அழகிரி முக்கிய அறிவிப்பு
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரி, புதிய கட்சித் தொடங்கப் போவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர், ‘ஜனவரி 3 ஆம் தேதி எனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தவுள்ளேன். ஆலோசனைக்குப் பிறகு கட்சித் தொடங்குவது பற்றி முடிவு செய்வேன். எனக்கு இதுவரை திமுகவில் இருந்து அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தாலும் செல்ல மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.
அழகிரி, கருணாநிதி உயிரோடு இருந்தபோதே திமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். தொடர்ந்து அவர் கட்சியில் இணைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவரின் எண்ணம் நிறைவேறவில்லை. இதைத் தொடர்ந்து அவ்வப்போது பரபரப்பான அரசியல் கருத்துகளை தெரிவித்து வந்தார் அழகிரி. சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிக்கப்போவது குறித்து அறிவிப்பு வெளியிட்டவுடன், அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் அழகிரி. இதன் காரணமாக அவர், ரஜினியின் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், புதிய கட்சித் தொடங்குவது பற்றி அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார் அழகிரி.