சினிமா செய்திகள்
உலக அழகியை நாயகியாக்கிய அக்ஷய் குமார்!
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகவுள்ள பிரித்விராஜ்சவுகான் படத்தில் ராணி சம்யுக்தையாக நடிக்க உலக அழகி மானுஷி சில்லார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
1962ம் ஆண்டில் எம்.ஜி.ஆர், பத்மினி நடிப்பில் வெளியான ராணி சம்யுக்தா படத்தை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பலரும் பார்த்திருப்பார்கள். பிரித்விராஜின் வீரம் குறித்த பல படங்கள் கதைகள் மற்றும் நாடகங்களும் ஹிந்தி மற்றும் பிற மொழிகளிலும் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், யஷ் ராஜ் சோப்ரா தயாரிப்பில் சந்திரபிரகாஷ் திவிவேதி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகவுள்ள பிரித்விராஜ்சவுகான் படத்திற்கு நாயகி வேட்டையை படக்குழு நடத்தி வந்தது.
பாலிவுட்டில் முன்னணி நாயகிகள் சிலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. ஆனால், சிலர் கால்ஷீட் இல்லாததாலும், சரியான நாயகியை தேர்வு செய்யவேண்டும் என்றும், தேடிய படக்குழுவினர், கடைசியாக 2017ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்திய அழகி மானுஷி சில்லாரை நாயகியாக தேர்வுசெய்துள்ளனர்.
விரைவில் படப்பிடிப்பு மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.