தமிழ்நாடு
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அரசாணை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் 12ஆம் வகுப்பு தேர்வை நடத்த தமிழக அரசு முடிவு செய்து உள்ளது என்பதும் 12ஆம் வகுப்பு தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எழுத்துத் தேர்வு மே மாதம் நடைபெற இருந்த நிலையில் அந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து வரும் 10ஆம் தேதி ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வரும் திங்கட்கிழமை ஆலோசனை செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே வரும் 10ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி 12ஆம் வகுப்பு தேர்வு குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.