தமிழ்நாடு
சட்ட விரோத தொழில்; உச்ச கட்டத்தில் உளறும் தினகரன்: விளாசிய ராஜேந்திர பாலாஜி!
அமமுகவை சேர்ந்தவர்கள் யாரும் எந்த காரணத்துக்காகவும் ஆளும் கட்சியினருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.
மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமமுகவில் இணையும் விழா நேற்று முன்தினம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய தினகரன், எத்தனையோ பேர் ஆளும்கட்சி காரர்கள் வீட்டுத் திருமணங்களுக்குச் செல்வதும், அமைச்சர்களுடன் சுமூகமாக உறவு வைத்துக்கொண்டும் இருக்கின்றனர்.
நமக்கு எப்படி திமுக எதிரியோ, அப்படி இந்த துரோகிகளையும் ஒரு கை பார்க்க வேண்டும். அமைச்சர் பத்திரிகை கொடுத்ததால் சென்றோம் என காரணம் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே ஆளும் கட்சியினருடன் தொடர்பு வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் நேற்று விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், திமுகதான் எங்களுக்கு போட்டியே தவிர அமமுக எங்களுக்கு போட்டி இல்லை. மக்களவைத் தேர்தலுடன் அமமுக கதை முடிந்துவிட்டது. சட்டத்திற்கு விரோதமான தொழில் செய்பவர்கள்தான் அமமுகவுடன் உள்ளனர். தோல்வியின் உச்ச கட்டத்தில் உளறிக்கொண்டிருக்கிறார் தினகரன். விரக்தியின் வெளிப்பாடுதான் அவருடைய பேச்சு என்று விளாசினார்.