தமிழ்நாடு
தகுதியே இல்லாத உதயநிதி, திமுக ஒரு குடும்ப முன்னேற்ற கழகம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
திமுகவில் மன்னர் ஆட்சி போல அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பதவியில் இருந்து வருகிறார்கள் எனவும் திமுகவை குடும்ப முன்னேற்ற கழகம் எனவும் விமர்சித்துள்ளார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினி மகனும், முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நேற்று திமுகவில் இளைஞர் அணிச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இது திமுகவினரால் கொண்டாடப்பட்டது. மேலும் ஊடகங்களிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் இந்த அறிவிப்பு அதிக கவனம் பெற்றது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக ஒரு மடாதிபதி இல்லை என அந்தக் காலத்தில் கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் தற்போதைய நிலைப்பாட்டில் பார்க்கும் போது திமுக மடாதிபதி மன்னராட்சி போலவே செயல்படுகிறது.
திமுகவில் அதிகார மையங்கள் ஒரே குடும்பத்தில் உள்ளது. மன்னராட்சி போல் அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் பதவியில் இருந்து வருகின்றனர். உதயநிதியை விட நல்ல தலைவர்கள் திமுகவில் இருக்கின்றனர். ஆனால், தகுதி இல்லாத உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினின் மகன் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு பதவி வழங்கப்பட்டுள்ளது.
திமுக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பதிலாக, குடும்ப முன்னேற்ற கழகம் என்று வைத்துக் கொள்ளலாம். சாமானியன் கூட முதலமைச்சர் ஆகலாம் என்பது அதிமுகவில் தான் சாத்தியம். பழனிச்சாமி முதலமைச்சரானது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. எடப்பாடி பழனிச்சாமி தான் பச்சைத்தமிழன். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் ஆட்சி அமைய வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.