தமிழ்நாடு

மோடி கண் அசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது: ராஜேந்திர பாலாஜி!

Published

on

இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உள்ள நிலையில், பிரதமர் மோடி கண் அசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது என அதிமுகவை சேர்ந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கடந்த 24-ஆம் தேதி கொண்டாடினர். இந்நிலையில் சிவகாசி அருகே ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது புல்வாமா தாக்குதல் குறித்தும், கூட்டணி கட்சியான பாஜக மற்றும் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாதிகளை நமது ராணுவம் அழித்துள்ளது. நாட்டின் மீது பற்றுகொண்ட மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்.

இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் கட்சிகளுக்கு நீங்கள் ஓட்டு போடாதீர்கள். இந்திய இறையாண்மைக்கு உழைக்கின்ற பாஜக, அதிமுக, பாமக கூட்டணியை ஆதரியுங்கள். இன்றைக்கு மோடியை கண்டு சர்வதேச நாடுகள் பயப்படுகின்றன. மோடி கண் அசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது. இந்த வி‌ஷயத்தில் அதிமுக தொண்டன் மட்டுமல்ல நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மோடியின் கரத்தை உயர்த்தி பிடிக்க தயாராக இருக்கின்றனர் என்றார் அமைச்சர்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் பிரதமராக மோடி தொடர்ந்து இருக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தமிழக முதலமைச்சராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Trending

Exit mobile version