தமிழ்நாடு
எங்களை பேசினால் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம்: அதிமுக அமைச்சர் ஆவேசம்!
அதிமுகவை குறை சொல்லி யார் பேசினாலும், அவர்களை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிச்சாமி செல்லக்கூடியவர் நாட்டின் பிரதமராக வருவார். மத்திய ஆட்சியில் அதிமுக பங்குபெறும். மோடி பிரதமராக வரவேண்டும் என நாட்டில் உள்ள இளைஞர்கள், முதல்வர், அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள் விரும்புகிறார்கள். மக்களுக்கு கொடுக்க எங்களுக்கு மனம் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சியினரோ குறை சொல்கிறார்கள்.
அதிமுக மகத்தான, 46 வயது நிரம்பிய, 56 இஞ்ச் மார்பளவு கொண்ட இளைஞர்களை கொண்ட இயக்கம். இந்த இயக்கத்தை யார் குறை சொல்லி பேசினாலும், அவர்களை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம். சொற்களால் தாக்குதல் நடத்துவோம். எங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்றார்.
மேலும் அதிமுகவுக்கு வீர வரலாறு உண்டு, திமுகவுக்கு கோழை வரலாறு தான் உண்டு. ராமதாஸ் என்ன பாகிஸ்தான்காரரா? அவர் வீட்டில்போய் சாப்பிட்டால் என்ன தப்பு? என கேள்வி எழுப்பினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.