தமிழ்நாடு
பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பம் செய்வது எப்போது? அமைச்சர் பொன்முடி தகவல்
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறுவது எப்போது என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
பிளஸ் டூ முடித்த மாணவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் படிப்புகளில் சேருவதற்கான அட்டவணை இன்று மாலை வெளியிடப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு ஜூலை 1 முதல் விண்ணப்பம் செய்யலாம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இந்த ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்காக 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும், ஒவ்வொரு பாடத்திட்டமும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த புதிய பாடத்திட்டங்கள் இருக்கும் என்றும் முதல் கட்டமாக இந்த புதிய பாடத்திட்டங்கள் 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் அறிமுகம் செய்யப்படும் என்றும் பின்னர் படிப்படியாக அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.