தமிழ்நாடு
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பு: தமிழக அமைச்சர் தகவல்!
தமிழகம் உள்பட இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அம்மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும். இந்த நிலையில் மீண்டும் இந்தியாவின் சில நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் தேர்தல் முடிந்த பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
இந்த் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் இன்று சென்னை ஆவடியில் தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். அப்போது அவர் கொரோனா வைரஸ் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புகள் இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.