தமிழ்நாடு
2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியா?
இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்ற செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கிராமம் முதல் நகரம் வரை உள்ள பொதுமக்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு வருகின்றனர். தினமும் லட்சக்கணக்கானவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும், இதில் பெரும்பாலானோர் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தி விட்டனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா வைரஸ் என்று புதிதாக உருவாகி இருப்பதை அடுத்து ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களை டெல்டா வைரஸை கட்டுப்படுத்தாது என்று கூறப்படுகிறது.
எனவே இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி போட வேண்டிய நிலை ஏற்படும் என்று செய்தி வெளியானது. இந்த நிலையில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் எண்ணம் இப்போது இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி போட்ட பிறகு பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படுமா என்பது குறித்து ஆய்வு செய்து அதன்பின் பூஸ்டர் தடுப்பூசி குறித்து முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.