தமிழ்நாடு
மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் தேதி: அமைச்சர் கே.என்.நேரு தகவல்!
தமிழகத்தில் மீதமுள்ள உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்குள் தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தேர்தலை எப்போது நடத்தலாம் என்ற ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் தேர்தல் தேதியை இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வரும் 31-ஆம் தேதிக்குள் தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது பெயர்களை உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர்தல் தேர்தல் திருவிழா விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.