தமிழ்நாடு
அரசியலை விட்டே விலக தயார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும் அந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் நிரூபித்தால் தான் அரசியலை விட்டே விலக தயார் என்றும் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் தீவிர சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று அவர் கோவில்பட்டி தொகுதிக்குரிய கரிசல்குளம், சிவந்திபட்டி, துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தபோது பொதுமக்களிடையே பேசினார்.
அப்போது ’அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் எனக்கு சிங்கப்பூரில் ஹோட்டல் இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி உள்ளனர். சிங்கப்பூரில் எனக்கு ஓட்டல் இருப்பதாக அவர்கள் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகி செல்ல தயார் என்று கூறினார்.
தேர்தல் ஆணையத்தில் தனது சொத்துக்கள் குறித்த முழு விவரங்களை வெளிப்படையாக கூறியுள்ளதாகவும் அதை தவிர வேறு எந்த சொத்தும் தனது பெயரில் இல்லை என்றும் கூறிய கடம்பூர் ராஜு தன் மீது கூறிய அவதூறு பேச்சை திரும்பப் பெறவில்லை என்றால் அவதூறு கூறியவர்கள் மீது வழக்கு தொடர்வேன் என்றும் அவர் எச்சரித்தார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.