தமிழ்நாடு

‘நாங்க பதிலடி கொடுத்தா தாங்க மாட்டீங்க..?’- தேமுதிகவுக்கு ஜெயக்குமாரின் நேரடி எச்சரிக்கை

Published

on

அதிமுக – தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேமுதிக, அடுத்தக்கட்டமாக வேறு எந்தக் கட்சியுடனாவது கூட்டணி வைக்குமா, அல்லது தனித்துத் தேர்தலைச் சந்திக்குமா என்று தெரியவில்லை. கூட்டணி முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தேமுதிகவினர் அதிமுகவை கடுமையாக சாடி வருகின்றனர். இது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார், ‘அதிமுகவில் இருந்து தேமுதிக விலகியது அதிமுகவுக்கு பாதிப்பில்லை. பாதிப்புக்கு தேமுதிகவுக்கு தான். தேமுதிக எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது. தேமுதிகவுடன் கூட்டணி தர்மத்தை கடைபிடித்தோம். நன்றி மறந்து தேமுதிகவினர் பேசக் கூடாது. தேமுதிகவுக்கு அங்கீகாரம் கிடைக்கக் செய்தது அதிமுக தான். வார்த்தைகளை அளந்து பேசுங்கள். ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டக் கூடாது. பிடிக்கவில்லை என்றால் நண்பர்கள் போல் கைகுலுக்கி செல்ல வேண்டும்.

தேமுதிகவினர் பேசுவதை விட என்னாலும் வெளுத்துகட்ட முடியும். கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில் மவுனமாக இருக்கிறோம். அரசியல் ரீதியான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளலாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு விமர்சனம் செய்யக் கூடாது. நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அதற்கு உரிய பதிலடியை அதிமுக கொடுக்கும். தேமுதிக எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும். தேமுதிகவின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை வழங்குவதாக தெரிவித்து இருந்தோம். ஒவ்வொரு கட்சியின் பலத்துக்கு ஏற்ப அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து அதிமுகவை பிடிக்கவில்லை என்பதற்காக சேற்றை வாரி இறைப்பதா? கீழ்த்தரமான அரசியலை தேமுதிக முன்னெடுத்தால் அதிமுக பதிலடி கொடுக்கும் என்றும் எடப்பாடி மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என எச்சரிக்கும் தொனியில் பேசியுள்ளார்.

Trending

Exit mobile version