தமிழ்நாடு
எழுதி வைத்துக்கொள்ளுங்கள்; தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை: ஜெயக்குமார் ஆவேசம்!
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு தன்னை முதலமைச்சராக்க துணை முதல்வர் ஓபிஎஸ் டிடிவி தினகரனை சந்தித்ததாக தெரிவித்தார். இது தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதன் பின்னர் டிடிவி தினகரனும் ஓபிஎஸ் தன்னை சந்த்தித்ததை உறுதிபடுத்தி செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் விவகாரம் பெரிதாகுவதை உணர்ந்த ஓபிஎஸ் சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தார். அதில் தினகரன் அழைத்ததின் பேரிலேயே சந்தித்ததாகவும், அப்போது தினகரன் தான் தன்னை முதல்வராக்க வலியுறுத்தியதாகவும், அதற்கு சம்மதிக்காத நான் அங்கிருந்து வந்துவிட்டேன் என கூறினார்.
இந்நிலையில் இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவையும் அவரைச் சார்ந்தோர்களையும் ஒதுக்கிவைத்து, கட்சியிலும் ஆட்சியிலும் அவர்களின் தலையீடு இல்லாமல்தான் ஆரம்பத்திலிருந்து செயல்பட்டுவருகிறோம். அந்த நிலையைத்தான் தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தினகரன் அதிமுகவில் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்கலாம். ஏனெனில் அவருக்கு வழியும் இல்லை, வேறு வாய்ப்பும் இல்லை. அமமுக என்ற கட்சியை தினகரன் ஆரம்பித்தாலும், நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என்ற நிலைதான் அவருக்கு இருக்கிறது. தினகரன் அதிமுகவில் இணைய நினைத்தாலும், எங்களைப் பொறுத்தவரை அந்த எண்ணமே எங்களுக்கு இல்லை. அவரைக் கட்சியில் சேர்ப்பது என்பது கண்டிப்பாக நடக்காத ஒன்று. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்றார் ஆவேசமாக.