தமிழ்நாடு
இனி பேருந்து, மின் கட்டணங்கள் எல்லாம் உயரும் பாருங்கள்- முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
‘இனி பேருந்து கட்டணங்கள், மின் கட்டணங்கள் என எல்லாம் உயரும்’ என தமிழ்நாடு பட்ஜெட் 2021 குறித்து விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2021 இன்று சட்டசபையில் மாநில நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று இந்த ஆண்டுக்கான பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது பாதியிலேயே அதிமுக-வினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தமிழ்நாடு பட்ஜெட் குறித்து விமர்சித்துப் பேசினர். ஜெயகுமார் கூறுகையில், “இது டிஜிட்டல் பட்ஜெட் இல்லை. டிமிக்கி பட்ஜெட் தான். 2011-ம் ஆண்டு அரசு கஜானாவை காலி செய்து தான் வெளியேறியது திமுக. அதிமுக 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளதாக தமிழக அரசு கூறுவது தவறு. அவர்கள் வைத்து 1.5 லட்சம் கோடி கடனை நாங்கள் தான் அடைத்தோம்.
பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்னர் வெள்ளை அறிக்கை விட்டது மிகப்பெரிய தவறு. அது வெள்ளை அறிக்கை இல்லை, வெறும் வெற்று அறிக்கை. இந்த டிஜிட்டல் பட்ஜெட்டால் இனி பாருங்கள் சொத்து வரு, பேருந்து கட்டணம், மின் கட்டணம் எல்லாம் உயரும்” எனக் கூறினார்.