தமிழ்நாடு
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000: ரேசன் கார்டில் பெயர் மாற்றம் அவசியமா?
பத்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழகத்தில் அமைந்துள்ள திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதிகளில் ஒன்று குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 திட்டம்.
இந்த திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்பத் தலைவிகள் மத்தியில் இருக்கும் நிலையில் இந்த திட்டத்தின்படி மாதம் ரூபாய் 1000 பெற வேண்டும் என்றால் குடும்ப அட்டையில் குடும்பத்தலைவியாக பெண்களின் பெயரில் இருக்க வேண்டும் என்று செய்திகள் வெளியானது.
இதனை அடுத்து ஏராளமானோர் ரேஷன் அட்டையில் தங்களுடைய பெயரை குடும்ப தலைவியாக மாற்ற முயற்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
ரேசன் கடைகளில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்காக ரேஷன் கார்டில் பெயர் மாற்ற செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்று பீதி தேவையில்லை என கூறிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித்தொகை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்காக ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்
மேலும் பயோமெட்ரிக் முறையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதால், தகுதியானவர்களுக்கு குடும்ப அட்டை விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.