தமிழ்நாடு
ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி: புதிய திட்டத்தை அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற புதிய திட்டத்தை மாவட்டம்தோறும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு முதல் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சியை எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகிறது என்று கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், சிஎஸ்ஆர் நிதி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற திட்டத்தை கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் கூறிய அன்பில் மகேஷ் அவர்கள், கொரோனா தொற்றை காட்டிலும் கற்றல் குறைபாடு மிகப் பெரிய தொற்றாக இருக்கும் என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பில் அனைத்து தரப்பினரும் கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் முதலமைச்சர் சரியான முடிவை எடுப்பார் என்றும் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசின் அரசின் அறிவிப்பு வெளியாகும் போது பள்ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பும் அதில் இடம்பெறும் என்று தெரிவித்தார்.
மேலும் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டியது அவசியம் இல்லை என்றும் வர விருப்பமுள்ளவர்கள் மட்டும் வரலாம் என்றும் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.