தமிழ்நாடு

தமிழகத்தில் 1-8ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு எப்போது? அன்பில் மகேஷ் தகவல்!

Published

on

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது என்பதும் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வருவதை அடுத்து ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப் பட்டது என்பதும் அதேபோல் கல்லூரிகளுக்கு வகுப்புகள் தொடங்கின என்பதும், தற்போது மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது எப்போது? என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து செப்டம்பர் 15ஆம் தேதிக்கு தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை இந்த அறிக்கைக்கு பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். எனவே 15ஆம் தேதிக்கு பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version