இந்தியா
மினி நூலகமாக மாறிய பழுதடைந்த பிரிட்ஜ்: கொல்கத்தா தம்பதியரின் அசத்தல் சேவை!
பழுதடைந்த குளிர்சாதன பெட்டியை மினி நூலகமாக மாற்றி பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் வைத்துள்ள கொல்கத்தா தம்பதியரின் அசத்தல் சேவைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தற்கால டிஜிட்டல் உலகில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் பலரிடம் இல்லாமல் போய்விட்டது. இதனை அடுத்து மீண்டும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக கொல்கத்தாவை சேர்ந்த தம்பதியர் முடிவு செய்தனர்.
இதற்காக தங்களிடம் பழுதான குளிர்சாதனப் பெட்டி ஒன்றை மினிநூலகம் போல் மாற்றினர். அந்த குளிர்சாதன பெட்டியில் ஏராளமான புத்தகங்களை அடுக்கி வைத்து பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் வைத்துள்ளனர். ஒரு பழுதடைந்த குளிர்சாதனப்பெட்டி மினி நூலகமாக மாறியதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் இதில் இருக்கும் புத்தகங்களை எடுத்து படித்து பயன்பெற்று வருகின்றனர்.
இந்த மினி நூலகத்தில் இருந்து புத்தகங்களை இலவசமாக எடுத்து படித்துக் கொள்ளலாம் என்றும் வீட்டுக்கு கூட எடுத்துச் சென்று படித்து விட்டு, படித்தவுடன் திரும்ப வந்து வைத்து விடலாம் என்றும் அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
வித்தியாசமாக பொது சேவை செய்து வரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் இவர்களை போலவே மற்ற ஊர்களிலும் இதே போல் பழுதடைந்த குளிர்சாதன பெட்டி உள்பட பல்வேறு பொருள்களில் நூலகத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்துள்ளது.