தமிழ்நாடு
பால் விலை உயர்வு ஒரு பிரச்சனையே இல்லை: பால்வளத்துறை அமைச்சர் அதிரடி!
சமீபத்தில் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு. இதற்கு மக்கள் மத்தியிலும், எதிர்கட்சியினரிடமும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பால் விலை உயர்வை மக்கள் ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தி 28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாகவும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்குத் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இதனை மக்கள் பிரச்சினையாகவே கருதவில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மக்கள் தாங்கி கொள்ளக் கூடிய அளவுக்குத்தான் பால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்படவில்லை. பால் விலை உயர்த்தப்பட்ட பின்னர் கூடுதலாக 60 ஆயிரம் லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இதில் மக்களை திமுக தூண்டிவிடப் பார்க்கிறது என திமுகவை குற்றம் சாட்டினார்.