கிரிக்கெட்

‘ஏன்டா நீ ஆஸி., கேப்டன்டா… இப்டியா பேசுறது’- ஆரோன் பின்சை வறுத்தெடுத்த மைக்கெல் கிளார்க்

Published

on

ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருப்பவர் ஆரோன் பின்ச். அவரை இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் எடுக்காதது பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பின்ச் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பின்ச்சின் கருத்துக்கு அவரை சாடியுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க்.

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு சில மாதங்களில் நடக்க உள்ளது. இதையொட்டி ஐபிஎல் மினி ஏலம் சென்ற வாரம் சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அணிகள் தங்களுக்கு விருப்பமான வீரர்களை ஏல முறையில் எடுத்துள்ளது.

ஏலத்துக்கு 1,097 வீரர்களில் இருந்து 292 பேர் தேர்வு செய்து ஏலப் பட்டியல் உருவாக்கப்பட்டு இருந்தது.

இதில் ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல்லை எடுக்க ஐபிஎல் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அவரை ரூ.14 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கியுள்ளது. அதேபோல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இது ஒருபுறம் இருக்க, இங்கிலாந்து வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேஸன் ராய், ஆஸ்திரேலிய வீரர்கள் அலெக்ஸ் கெரே, ஆரோன் பின்ச், வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், இலங்கை வீரர் குஷால் பெரேரா, சாம் பில்லிங்ஸ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன்வரவில்லை. இந்த வீரர்கள் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

ஐபிஎல் அணிகளின் இந்த முடிவு குறித்து பின்ச் கூறுகையில், ‘ஐபிஎல் தொடரில் பங்கெடுத்திருந்தால் அது மிகச் சிறப்பானதாக இருந்திருக்கும். அது ஒரு பிராமதமான தொடர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நான் இந்த முறை எந்த அணியாலும் எடுக்கப்பட மாட்டேன் என்பதை எதிர்பார்த்தே இருந்தேன். தற்போதைக்கு குடும்பத்துடன் நேரம் செலவிடுவது என்பது அவ்வளவு மோசமான விஷயமாக இருக்காது’ என்று கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்துப் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதே நேரத்தில் பின்ச்சின் பேச்சால் கொதிப்படைந்த கிளார்க், ‘இப்படியான ஒரு கருத்தை பின்ச் தெரிவித்துள்ளார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. பின்ச் தான் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருக்கும் நபர். அப்படியென்றால் அனைத்து அணிகளும் அவர் வேண்டும் என்று தான் நினைத்திருக்க வேண்டும். அப்படியான எண்ணத்தில் தான் அவரும் இருந்திருக்க வேண்டும். அதை விடுத்து, எந்த அணியும் எடுக்காது என்று எனக்கே தெரியும். அதைப் பற்றி கவலை கொள்ளவில்லை என்று பேசுவது பொறுப்பான பதில் அல்ல. இது அவரின் நம்பிக்கையற்ற மனநிலையைப் பிரதிபலிக்கிறது’ என விமர்சித்துள்ளார்.

Trending

Exit mobile version