தமிழ்நாடு
எம்ஜிஆர் கண்ட சின்னம் நம்பியார் கையில்… விளாசிய டிடிவி தினகரன்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்கு பின்னர் தற்போது அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தற்போது எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளது. இதனை தற்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அதிமுகவை மீட்டெடுப்பேன் என கூறி அமமுக என்ற புதிய கட்சியை ஆரம்பித்த டிடிவி தினகரன் ஆரம்பம் முதலே ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து முற்றிலுமாக எடப்பாடி பழனிசாமியால் ஓரம்கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வமும் இதே கருத்தை தற்போது வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று தமிழக பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அமமுகவின் டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் 2017-இல் தர்மயுத்தம் துவங்கினார். இப்பொழுது அது தவறு என்பதை உணர்ந்து தான் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்கிறார். அதுதான் எங்கள் கருத்தும். அதைத் தாண்டிச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றார்.
மேலும், அதிமுகவின் கோட்டை தான் ஈரோடு. ஆனால், இன்று எடப்பாடி பழனிசாமி அப்பகுதியை கோட்டை விட்டுள்ளார்கள். எம்ஜிஆர் கண்ட சின்னம் நம்பியார் கையில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது எனவும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார்.