தமிழ்நாடு
ரஜினி, கமலை டார்கெட் செய்து களமிறங்கும் ‘எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி’!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை குறிவைத்து போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
கமல் தலைவராக இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது ‘டார்ச்லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டது. தற்போது அந்தச் சின்னத்தை மய்யத்துக்குத் தர மறுத்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். இந்நிலையில் டார்ச்லைட் சின்னம், எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஸ்வநாதன், ‘டார்ச்லைட் சின்னத்தை எங்களிடமிருந்து பறிக்க கடுமையாக முயற்சி நடந்து வருவதாக அறிகிறேன். அவ்வளவு சுலபத்தில் அதை விட்டுக் கொடுக்க மாட்டோம். நாங்கள் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு. அவரின் தைரியமும் துணிச்சலும் எங்களுக்கு இருக்கிறது. ரஜினி மற்றும் கமலின் கட்சிகள் எந்த இடங்களில் போட்டியிடுகிறதோ, அந்த இடத்தைக் குறிவைத்து எங்கள் கட்சி சார்பில் போட்டியிடுவோம். தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்’ என்று சவால் விட்டுள்ளார்.