தமிழ்நாடு
வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ இரயில் டிக்கெட்: புதிய வசதி இன்று அறிமுகம்!
சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரெயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என ஒரு நாளைக்கு 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மெட்ரோ இரயிலில் பயணம் செய்கின்றனர்.
20% சலுகை
மெட்ரோ இரயிலில் பயணம் செய்ய பொதுமக்களை ஈர்க்கும் வகையில், பயணிகள் அட்டைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் டிக்கெட் பெற்றால் 20% சலுகை, ரூ.2,500 இல் ஒரு மாதப் பயணம், ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட நபர்க பயணித்தால் குரூப் டிக்கெட் உள்ளிட்ட பல சலுகைகளை சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்தது.
வாட்ஸ்அப்பில் டிக்கெட்
நாளுக்கு நாள் மெட்ரோ இரயிலில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ்அப் செயலியின் மூலம் மெட்ரோ இரயில் டிக்கெட்டை பெறும் வசதி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அருமையான இந்த வசதியை திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில், மெட்ரோ இரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார்.
83000 86000 என்ற வாட்ஸ்அப் எண்ணில், CMRL Live எனும் சாட் வழியாக மெட்ரோ இரயில் டிக்கெட்டை பதிவு செய்யலாம். செல்ல வேண்டிய இடத்திற்கான கட்டணத்தையும், வாட்ஸ்அப் மூலமாகவே செலுத்தி உடனே டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய வசதியின் மூலம், ஒரு மொபைல் போனில் இருந்து ஒரே நேரத்தில் 6 டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.
பயணர்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்து புறப்படும் போது, மெட்ரோ நிர்வாகம் கொடுத்த வாட்ஸ்அப் எண்ணிற்கு புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்து கட்டணத்தை செலுத்தி, டிக்கெட்டை பெறலாம். பயணரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு வரும் ‘கியூஆர்’ கோடை பயணித்தின் போது ஸ்கேன் செய்து பயணிக்கலாம்.