தமிழ்நாடு
மீ டூ பாலியல் குற்றச்சாட்டுகள்: ஏற்க முடியாது என பொன்னார் காட்டம்!
தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை வெளியே சொல்லாமல் மனதிற்குள் வைத்திருந்தவர்கள் அச்சமின்றி வெளியே தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் மீ டூ இயக்கம். இதில் பல முக்கிய பிரபலங்கள் சிக்கி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த மீ டூ எழுச்சியால் மத்திய அமைச்சர் ஒருவரே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு சென்றுள்ளார். தமிழகத்தில் மீ டூ விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கவிஞர் வைரமுத்து மீது சின்மயி வைத்த பாலியல் குற்றச்சாட்டு தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறது மீ டூ.
இந்நிலையில் இந்த மீ டூ பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்மாறான கருத்தை முன்வைத்துள்ளார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். யார் மீதும் ஆதாரமில்லாமல் சகதியை வீசும் வகையில்தான் மீ டூ உள்ளது. இதனால் இவற்றின் மூலம் வரும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.