தமிழ்நாடு
நடிகை மீராமிதுனுக்கு மேலும் இரண்டு வாரம் காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு
பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை மீராமீதுனுக்கு காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவருக்கு மேலும் இரண்டு வாரங்கள் காவல் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான மீராமிதுன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதனை அடுத்து அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கேரளாவில் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். இதனை அடுத்து அவரை ஆகஸ்டு 27-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்றுடன் மீராமிதுன் காவல் முடிவடைந்ததை அடுத்து இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அவரது காவலை செப்டம்பர் 9-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
நடிகை மீராமிதுன் ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஜோ மைக்கேல் என்பவர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மீராமிதுனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.