தமிழ்நாடு
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கொரோனா உறுதி!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வந்திருக்கும் தகவல் அவரது கட்சி தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது என்பதும் தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்றாவது அலையில் பொதுமக்கள் மட்டுமின்றி கமல்ஹாசன், த்ரிஷா, வடிவேலு உள்ளிட்ட ஒருசில திரையுலக பிரபலங்களும், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட ஒருசில அரசியல் பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது கட்சியின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விரைவில் குணமாக வேண்டும் என அவரது கட்சி தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.