இந்தியா
டீக்கடையில் கிடைத்த லாபம்.. ரூ.91 லட்சத்திற்கு மெர்சிடிஸ் கார் வாங்கிய எம்பிஏ பட்டதாரி..!
எம்பிஏ படித்து விட்டு டீக்கடை வைத்து பணம் சம்பாதித்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் ரூபாய் 91 லட்சத்திற்கு மெர்சிடிஸ் ஆடம்பர கார் வாங்கியுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தொழில்நுட்ப படிப்பு படித்துவிட்டு லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு இருக்கும் இளைஞர்கள் எப்பொழுது தங்களது வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் உள்ளனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்து தற்போது அன்றாட செலவிற்கே திண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் தான் எம்பிஏ படித்து நிறுவனத்தின் வேலையை எதிர்பார்க்காமல் சொந்த தொழில் செய்ய முடிவு செய்தவர் இந்திய இளைஞர் பிரபுல் பில்லோர். இவர் முதலில் ஒரு சிறிய அளவில் டீக்கடையை தொடங்கி, அதன் பிறகு படிப்படியாக தனது கடையை விரிவுபடுத்தினார்.
எம்பிஏ படித்துவிட்டு டீக்கடை தொடங்குவதை பார்த்த அவரது நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் கேலி செய்தனர். ஆனால் அவர் அந்த கேலிகளை எல்லாம் காதில் வாங்காமல் தன்னுடைய டீக்கடையை பெரிய நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் கடுமையாக உழைத்தார். அவருடைய கடுமையான உழைப்பு, அவருடைய டீயில் உள்ள தரம், சுவை, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை அதிர்ஷ்டம் ஆகிய அனைத்தும் சேர்ந்து அவரது டீக்கடை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்தது.
இன்று இந்தியாவின் பல பகுதிகளில் கிளைகள் கொண்ட அவரது நிறுவனத்தின் தினசரி விற்பனையே லட்சக்கணக்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு டீக்கடை வைத்து வாழ்க்கையில் வெற்றி பெற்று பலருக்கு முன் உதாரணமாக இருக்கும் பிரபுல் பில்லோர் மெர்சிடிஸ் கார் வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
91 லட்சம் மதிப்புள்ள இந்த காரின் வீடியோவை பிரபுல் பில்லோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறந்த வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்பித்துள்ளார் என்றும் அவர் ஒரு லாபகரமான நிறுவனத்தின் உரிமையாளர் என்றும் பலர் கமெண்ட்ஸ் பகுதியை செய்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள அவர் தனது காரின் வீடியோவை இணையத்தில் பதிவேற்றி முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை, கடின உழைப்பு மற்றும் உத்வேகம் இருந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு என்னுடைய வாழ்க்கை ஒரு சான்று என்று தெரிவித்துள்ளார். மேலும் வாழ்க்கையில் இந்த அளவுக்கு வெற்றி பெற்று ஆடம்பர காரை நான் வாங்குவேன் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.