தமிழ்நாடு
நடிகர் மயில்சாமி மறைவு ஈடு செய்ய முடியாதது: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த எதிர்பாராத மரணச்செய்தியை கேட்டு திரையுலகமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர். அரசியல் பிரபலங்கள், தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைந்த நடிகர் மயில்சாமிக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்கள் மறைந்தார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்த அவர், தன்னுடைய ஒலிநாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானவர். காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவுக்கு அன்பைப் பெற்றவர்.
கலைஞர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தன்னுடைய கருத்துகளை ஆழமாகப் பதிவு செய்யக்கூடியவர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகக் கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.