இந்தியா
காங்கிரஸ் கொள்கைகளில் உடன்பாடு இல்லை: மாயாவதி அதிரடி!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என தனது அதிரடியை கூட்டியுள்ளார் அந்த கட்சியின் தலைவர் மாயாவதி.
மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளில் 116 தொகுதிகளில் வென்றால் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக வந்தது. பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு இடங்கள் தேவை என்ற நிலையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தந்துள்ளது.
இன்று மதியம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியப் பிரதேசம் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இதனை ஏற்று ஆளுநரும் காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவு குறித்து பேசிய மாயாவதி, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை எனினும் நாங்கள் காங்கிரஸ்க்கு ஆதரவு தருகிறோம். ஏனென்றால் பாஜக அரசு தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவில்லை, எனவேதான் காங்கிரஸ்க்கு ஆதரவு தருகிறோம் என்றார்.