சினிமா செய்திகள்
‘மாஸ்டர் vs ஈஸ்வரன்’- சிம்புவின் உருக்கமான மெஸேஜ்!
வரும் பொங்கல் விழா அன்று, விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள், சினிமா தியேட்டர்களில் வெளியாக உள்ளன. இந்நிலையில் எஸ்.டி.ஆர், திரையரங்கு மீட்சியை முன்னிலைப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிம்பு, தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈஸ்வரன் பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம். அதற்காத்தான் இந்தக் கொரோனா காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில்நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாண முயற்சியல்ல. இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வர வேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியாவிற்கு செய்யும் மரியாதை. அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வர வேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார்.
திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள். என் ரசிகர்கள், மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்குகள் நிறையட்டும். கொரோனா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மிக்ழவிக்கும்.
திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டு விட்டாலொழிய அந்த பழைய நிலை வராது. வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து, பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழக முதல்வர் விரைந்து, தமிழ்ப் புத்தாண்டிற்குள் நூறு சதவீத இருக்கை ஆக்கிரமிப்பு குறித்து உத்தரவிட்டால், மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம்’ என்று அறிக்கை வாயிலாக கூறியுள்ளார்.