சினிமா செய்திகள்
1000 திரை அரங்குகளில் வெளியாகும் மாஸ்டர்!
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் 1000 திரை அரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கொரோனா ஊரடங்கிற்கு முன்பே தயாரான மாஸ்டர் திரைப்படம், ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் ஊரடங்கின் காலமாகத் தள்ளிப்போன படம் இப்போது வரை வெளியாகாமல் உள்ளது.
தீபாவளிக்குப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கும் போது ரிலீஸ் ஆனால் நட்டம் தான் ஏற்படும். எனவே 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கும் வரை காத்திருப்போம் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்து இருந்தது.
ஆனால் வினியோகஸ்தர்கள் பெரும் தொகையை மாஸ்டர் தயாரிப்பாளரிடம் ஏற்கனவே வழங்கிவிட்டதால், அதற்கான வட்டியும் அதிகரித்துக்கொண்டே போனது. இடையில் ஓடிடியில் வெளியிடவும் கார்ப்ரேட் நிறுவனங்கள் முயற்சி எடுத்தன. படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பு நிறுவனமும் விடாப்பிடியாக உள்ளது.
தீபாவளிக்கு தியேட்டரில் படங்கள் ரிலீஸ் ஆனாலும், அவற்றைப் பார்க்கக் கூட்டம் இல்லை. எனவே மாஸ்டர் படம் திரைக்கு வந்தால் கொரோனா அச்சத்தை மீறி, ரசிகர்கள், பார்வையாளர்கள் திரைக்கு வர அதிக வாய்ப்புள்ளது.
எனவே திரை அரங்கு உரிமையாளர்கள் சுமார் 1000 திரை அரங்குகள் வரை மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். 1000 திரை அரங்குகளில் படம் வெளியானால் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ஈஸ்வரன், பூமி, ஜகமே தந்திரம், சுல்தான் உள்ளிட்ட படங்களின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.