தமிழ்நாடு
இட ஒதுக்கீடு தீர்ப்பை அடுத்து முதுநிலை மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிப்பு!
மருத்துவ மேற்படிப்பிற்காக வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியானதை அடுத்து மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதாவது ஓபிசி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதும் இந்த தீர்ப்பை அடுத்து மருத்துவ மேல் படிப்புகளில் அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வழக்கு காரணமாக முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த பல மாதங்களாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தேதியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா அவர்கள் தெரிவித்துள்ளார்.
முதுநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஜனவரி 12-ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அறிவித்ததை அடுத்து மாணவர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இட ஒதுக்கீடு தீர்ப்பை பின்பற்றி இந்த மருத்துவ கலந்தாய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.