தமிழ்நாடு
முதுநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வி இயக்ககம் அறிவிப்பு!
![mster degree - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/mster-degree.jpg)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மருத்துவக் கல்லூரிகள் திறந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருவதை அடுத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இளநிலை படிப்புகளுக்கு முதலாமாண்டு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர் என்பதும் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
அந்த வகையில் தற்போது இளநிலை படிப்புகளை அடுத்து முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற தொடங்கியுள்ளது. இன்று முதல் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரிகள் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளில் சேர இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்றும் செப்டம்பர் 1 வரை விண்ணப்பங்கள் மாணவர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படும் என்றும் உயர் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
143 அரசு கலை கல்லூரிகளில் எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்சிஏ உள்ளிட்ட அனைத்து முதுநிலை படிப்புகளுக்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த படிப்புக்கு சேர்க்கை கட்டணமாக விண்ணப்ப கட்டணம் ரூபாய் 58 என்றும் பதிவு கட்டணம் ரூபாய் இரண்டு என்றும் ஆக மொத்தம் 60 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் www.tngasapg.in, www.tngasapg.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.