வணிகம்
மாருதி சுசூகி கார்களை குத்தகைக்கு எடுத்து ஓட்டும் புதிய திட்டம் அறிமுகம்!
இந்தியாவின் பட்ஜெட் கார் நிறுவனமான மாருதி சுசூகி, கார்களை குத்தகைக்கு எடுத்து ஓட்டும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த குத்தகை கார் திட்டத்திற்கு Maruti Suzuki Subscribe என்று பெயரிடப்பட்டுள்ளது. மாருதி சுசூகி கார் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்திற்கு ஜப்பானின் ஓரிக்ச் நிறுவனத்துடன் கூட்டணியும் அமைத்துள்ளது.
Maruti Suzuki Subscribe திட்டம் என்றால் என்ன?
கார் வாங்க அதிக விலையாகும் என்று கருதுபவர்கள், மாருதி சுசூகியின் புதிய கார்களை 24 மாதங்கள், 36 மாதங்கள், 48 மாதங்கள் என்று குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தலாம். கார்களின் குத்தகை காலத்தை நீட்டிக்க விரும்பினால், காலக்கெடு முடியும் ஒரு மாதம் முன்பே கோரிக்கையை அளிக்க வேண்டும். குத்தகைக்கான பணத்தை மாத தவனையாக செலுத்தினால் போதும். கார்களை நிர்வகிப்பது, இன்சூரன்ஸ், சர்வீஸ் போன்றவை இலவசம். கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
மாருதி சுசூகியின் எந்த மாடல் கார்கள் எல்லாம் குத்தகைக்கு கிடைக்கும்?
மாருதி சுசூகியின் ஸ்விப்ட், டிசையர், விடாரா ப்ரீசா, எர்டிகா, வெலனோ சியாஸ் மற்றும் XL6 மாடல் கார்களை குத்தகைக்கு பெற முடியும்.
எங்கு எல்லாம் மாருதி சுசூகியின் குத்தகை சேவையை பெற முடியும்?
முதற்கட்டமாக மாருதி சுசூகியின் கார் குத்தகை சேவை குர்காம் மற்றும் பெங்களூரூ ஆகிய நகரங்களில் மட்டும் சோதனை முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி முன்பாகவே, மஹிந்தரா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் இது போன்ற கார் குத்தகை சேவையை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஊரடங்கு காரணங்களால் விற்பனை சரிந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாகத் தனிநபர் கார் பயன்பாடு அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், ஜூன் மாதம் மாருதி சுசூகி கார் விற்பனை 54 சதவீத சரிவை சந்தித்துள்ளது. விற்பனை சரிவை ஈடுகட்டவே கார் தயாரிப்பு நிறுவனங்கள் இதுபோன்ற புதிய கார் குத்தகை சேவைகளை அறிமுகம் செய்கின்றன என்று கூறப்படுகிறது.