கிரிக்கெட்

INDvAUS – இந்திய பேட்ஸ்மேன்களை வம்பிழுத்த லாபுஷானே; ஸ்டம்ப்-மைக்கில் பதிவான ‘பகீர்’ ஆடியோ!

Published

on

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்களை, ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷானே வம்பிழுத்துள்ளார். இது குறித்தான ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. லாபுஷானே, இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா மற்றும் ஓப்பனரான சுப்மன் கில் ஆகியோரை வம்பிழுத்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, பேட்டிங் செய்தது. அந்த அணி 338 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 61 ரன்களுக்கு விக்கெட் எதுவும் இழக்காமல் விளையாடி வருகிறது. ரோகித் மற்றும் கில் இந்திய அணி சார்பில் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்காக அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், சதமடித்து கெத்து காட்டினார்.

தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்து விளையாடி வரும் இந்திய பேட்ஸ்மேன்களை எப்படியாவது அவுட்டாக்க வேண்டும் என்னும் நோக்கில் லாபுஷானே, அவர்களிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். அவர்களின் கவனத்தைத் திசைத் திருப்பும் ‘ஸ்லெட்ஜிங்’ யுக்தி இது. சுப்மனிடம், ‘உனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்?’ என்கிறார். அதற்கு முதலில் எதுவும் பேசாமல் தவிர்க்கிறார் கில். தொடர்ந்து, ‘சச்சின் பிடிக்குமா? அல்லது விராட் கோலிதான் சிறந்த வீரர் என்று நினைக்கிறாயா?’ என்று நச்சறிக்கிறார். அதற்கு கில், ‘சொல்கிறேன். அப்புறம் சொல்கிறேன்’ என்கிறார்.

எப்படியோ பேச்சுக் கொடுக்க வைத்துவிட்டோம் என்கிற உற்சாகத்தில் தொடர்ந்து லாபுஷானே, ‘எப்போது சொல்வாய். இந்தப் பந்து போட்டு முடித்தப் பின்னர் சொல்வாயா?’ என்று சீண்டுகிறார். அதற்கு கில்லிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

பின்னர் ரோகித் சர்மா, ஸ்டிரைக் எடுத்தார். அவரிடமும் ஸ்லெட்ஜிங்கை தொடர்ந்தார் லாபுஷானே. ‘குவாரன்டீன்ல நீ என்ன பண்ண?’ என்று வினவுகிறார். அதற்கு ரோகித் எதுவும் சொல்லாமல், ஆட்டத்தில் கவனம் செலுத்துகிறார். தொடர்ந்து அவரை உரசிய லாபுஷானே, ‘சொல்லு, குவாரன்டீன்ல நீ என்ன பண்ண?’ என்கிறாய். இந்த முறையும் ரோகித்திடமிருந்து எந்த ரிப்ளையும் வரவில்லை. ஆனால், தன் முயற்சியை விட்டு விடாமல் தொடர்ந்து இருவரிடமும் வம்பிழுக்கும் வேலையை செய்து வருகிறார் லாபுஷானே. அவர் இப்படி ஸ்லெட்ஜிங் செய்த அனைத்து ஆடியோ பதிவுகளும் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. அது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்கள் பொதுவாக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டு, மற்ற நாட்டு வீரர்களின் கவனத்தை திசைத் திருப்பி விக்கெட் எடுப்பது சகஜம்தான். ஆனால், இந்த தொடரில் இதுவரை அது இல்லாமல் இருந்தது. தற்போது அந்த ‘ஸ்லெட்ஜிங் யுக்தி’ மீண்டும் ஆஸ்திரேலிய வீரர்களால் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version