தமிழ்நாடு
9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு: அதிரடி உத்தரவு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்வு இன்றி அனைவரும் பாஸ் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஒன்றாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மற்றும் தேர்தல் முடிந்தவுடன் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வை நடத்தி மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி அளவில் தேர்வு என்ற புதிய அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் 11ஆம் வகுப்பு சேர்க்கை எப்படி நடத்துவது என்ற குழப்பம் இருந்த நிலையில் பள்ளி அளவில் பொதுத் தேர்வு நடத்தி, அதில் மாணவர்கள் பெரும் மதிப்பெண்ணை பொருத்து 11ஆம் வகுப்பு சேர்க்கையை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் அனைத்து செய்முறை தேர்வுகளையும் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.