சினிமா செய்திகள்

’பண்டாரத்தி புராணம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாரி செல்வராஜ்!

Published

on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படம் குறித்த வழக்கு ஒன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது

இந்த படத்தில் இடம்பெற்ற பண்டாரத்தி புராணம் பாடலில் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இருப்பதாகவும் இதனை அடுத்தே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாரி செல்வராஜ் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும்‌ அன்பின்‌ வணக்கம்‌.

கர்ணன்‌ திரைப்படம்‌ தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள்‌ அளித்துவரும்‌ ஆதரவும்‌ நம்பிக்கையும்‌ எனக்கு பெரும்‌ உத்வேகத்தையும்‌ மகிழ்ச்சியையும்‌ அளிக்கிறது. ஒரு இளம்‌ இயக்குநரான என்‌ மீதும்‌ நீங்கள்‌ காட்டும்‌ எதிர்பார்ப்பும்‌ மரியாதையும்‌ தான்‌ சினிமா என்னும்‌ மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான்‌ அணுக வேண்டும்‌ என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது.

அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும்‌ கலைத்தன்மையோடும்தான்‌ நான்‌ என்‌ காட்சி படிமங்களை பெரும்‌ சிரத்தையோடு உருவாக்குகிறேன்‌. பண்டாரத்தி புராணமும்‌ அப்படி உருவாக்கபட்டதுதான்‌. சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என்‌ நிலத்தோடும்‌ என்‌ இரத்தத்தோடும்‌ கலந்து காலத்தின்‌ தேவதைகளான பண்டாரத்திகளின்‌ கதைகளைத்தான்‌ நான்‌ என்‌ திரைக்கதையின்‌ கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன்‌.

ஆனால்‌ நம்‌ சமூக அடுக்குமுறை உளவியலில்‌ சில பெயர்கள்‌ ஏற்படுத்தும்‌ தாக்கம்‌ என்பது புரிந்துகொள்ள முடியாததாகவும்‌ விலக முடியாததாகவும்‌ இருக்கிறது. அதன்‌ அடிப்படையில்‌ பண்டாரத்தி புராணம்‌ பாடலுக்கு ஏற்பட்டிருக்கும்‌ விவாதத்தையும்‌ வருத்தத்தையும்‌ கோரிக்கையையும்‌ முடித்து வைப்பதற்காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக்கலாம்‌ என்று முடிவு செய்திருக்கிறோம்‌. தேவதைகள்‌ எந்த பெயரில்‌ அழைக்கபட்டாலென்ன … பெயர்‌ மாறுவதால்‌ அவர்கள்‌ காட்டும்‌ மாட வெளிச்சம்‌ குறைந்துவிட போகிறதா என்ன?

இனி ஏமராஜாவின்‌ மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள்‌. இனி ஏமன்‌ கர்ணனை ஆட வைப்பதற்காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான்‌ கர்ணன்‌ ஆடுவான்‌ . ஆதரவளித்த அனைவருக்கும்‌ நன்றியும்‌ ப்ரியமும்‌ எப்போதும்‌…

காதலே பிரபஞ்ச மாடத்தின்‌ வெளிச்சம்.

seithichurul

Trending

Exit mobile version