சினிமா
அப்பாவுக்கும் மகனுக்கும் டாட்டா காட்டிய மாரி செல்வராஜ்; அடுத்த படம் இவருடன் தான்!
பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் முதல் படத்திலேயே தனது முத்திரையை தமிழ் சினிமாவில் ஆழமாக பதித்தார்.
அந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். தனுஷின் கர்ணன் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
கண்டா வரச்சொல்லுங்க கர்ணனை கையோடு கூட்டி வாருங்க, விட்ராதீங்க எப்போ என சந்தோஷ் நாராயணன் இசையில் அத்தனை பாடல்களும் தரமான சம்பவம்.
கர்ணன் படத்தை முடித்து விட்டு மாரி செல்வராஜ் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்துத் தான் ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகின.
மேலும், அந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்கப் போவதாக சொன்னார்கள். ஆனால், அதற்கு இடையே உதயநிதி ஸ்டாலின் தனது கடைசி படமாக மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் தான் பண்ண வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்க, பெரிய இடத்து ஆஃபரை ஏற்று அந்த படத்தை வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் ஃபாசில் என பெரிய நட்சத்திரங்களை வைத்து இயக்கி முடித்துள்ளார் மாரி செல்வராஜ்.
ஆனால், அந்த படம் ஏன் இன்னும் தாமதம் ஆகி வருகிறது என்பதற்கு பல காரணங்களை கூறி வருகின்றனர். தேர்தல் வரும் நேரத்திலும் படத்தை இறக்க திட்டம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
அந்த படத்தை முடித்து விட்டு வாழை என்கிற படத்தையும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி முடித்துள்ளார். அதன் பின்னர் ஆவது துருவ் விக்ரம் படத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சியான் விக்ரமை வைத்தே ஒரு படத்தை அவர் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், கடைசியில் தற்போது மீண்டும் தனுஷ் உடன் இணைந்து தான் மாரி செல்வராஜ் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பல நாட்களாக தயாரிப்பு நிறுவனத்தை பூட்டி வைத்திருந்த தனுஷ் மீண்டும் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க தனது வுண்டர்பார் நிறுவனத்தை திறந்து வைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.